Monday 15 May 2017

இது புயலைக் கடத்தும் கரை.

நகரத்தின் முக்கியப் பகுதியில் நின்று கொண்டிருந்த எனக்கு, புயல் வரப்போகும் செய்தியை யாரும் தெரிவிக்கவில்லை. சாதகமாய் இருந்த வானிலை, சற்றே மாறத்தொடங்கியது. இணையக் குறிப்புகள் அறிந்திடாத நான், இயற்கைச் சீற்றத்தை வைத்தே அரங்கேற இருக்கும் இன்னலை அறியத் தொடங்கினேன்.

காற்று மெல்ல மெல்ல அழுத்த, கலக்கம் தொடங்கியது என்னுள். அழுத்தம் அதிகமாகையில் காதல் மறந்து காளியாகத் தொடங்கினேன். தடித்த என் தோள்பட்டைகளும் என்னைத் தவிர்க்க ஆரம்பித்தன. கண்டு என்னை வியந்தோர் கூட, தொலைவில் இருந்தும் பயந்தே போயினர். புயலுடன் போராடுகையில், இப்புவி புதைந்து கொண்டிருந்தது.

என்னைக் கடக்கவே பயந்தனர் பலர். என்ன ஆவேனோ என்று மிரண்டுபோயிருந்த  நான் கலைந்த, தலையுடன் கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் கதறத்தொடங்கினேன். உதவி கேட்ட என்னை, மிரட்டலிடுகிறேன் எனத் தவறாய் புரிந்து கொண்டான் போலும் அந்த வானத்துக் காதலன். சாட்டைகள் தடிக்கத் தொடங்கின!

தண்டனையோ இது உம்மின் பகுதியாய் நான் இருப்பதற்கு என்றெண்ணி காளி நடனம் புரியத்தொடங்கினேன். நடனமிட்டு, கூச்சலிட்டு, சலசலத்து, சந்தேகித்து, கதறலிட்டு, கண்ணீர்விட்டு, விரட்டியடித்து, மெல்ல சாயத்தொடங்கினேன்.

பாவம் என்றார் சிலர், தாங்கிப்பிடிக்கத் தயாராய் இருந்தனர் பலர். பக்கம் வரவே தயங்கி நின்றனர் சிலர். ஒரு பெண் மட்டும் எதிர் கட்டிடத்திலிருந்து எனை வெறித்துப் பார்த்திருந்தாள். ஏதோ குறிப்பெல்லாம் எடுத்துக் கொண்டாள். காற்று தள்ளினாலும், புயல் சாய்த்தாலும், சாட்டையெனச் சீறினாலும், காதல் கடுத்தாலும், வீழ்ந்து மட்டும் விடாதே என அவளது பெருவிழிகள் எனக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தன.

காற்றடித்தது, வான் வஞ்சித்தது, புயல் அழுத்தியது, அவளது வாள்விழிகள் கட்டளையிட்டுக்கொண்டே இருந்தன. உறைந்து நின்றேன் ஒரு நிமிடம்! மீண்டும் நடனமாடத் தொடங்கினேன். இம்முறை புரிந்ததோ களிநடம்!

என்னைக் கண்டு பயந்தோரெல்லாம் என் வலுவினைக் கண்டு வியந்தோரானர்! ஆட்டுவித்தார் முன்பு, ஆடினேன் நன்று. ஆட்டம் பயின்று, ஆனந்தத்தாண்டவமிட தொடங்கினேன் பின்பு.

புயல் ஒன்று புரட்டுகையிலும் பல வண்ணக் குடை பிடித்தவரைக் கண்டு முடிவெடுத்தேன்! புயல் கரையைக் கடக்கவில்லை எனினும், புயலை நான் கடப்பேன். கடத்துவேன்!

-  -   இப்படிக்கு,
புயலுக்கு விழ மறுத்து
ஓங்கியூன்றி நிற்கும்

ஒரு அரச மரம்!

Saturday 9 July 2016

ஈர வெங்காயம்.

துருதிஷ்டமான ஒரு சம்பவத்தைப் பற்றி ஆராய்வதோ, கருத்துத் தெரிவிப்பதோ தவறான ஒரு செயல் என்பதால் சமீபத்தியக் கொலை பற்றிய எந்த எண்ணங்களையும் நான் முதலில் பதிவிடவில்லை! ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் நாடகங்களையும், அன்றாட நிகழ்வுகளையும் காண்கையில் மனதின் படபடப்புகளைப் பதிவிடாமல் இருக்க இயலவில்லை.

கொடூரமான முறையில் ஒரு பெண் இறந்து போயிருக்கிறாள், அவளை இழந்து அவளது குடும்பம் பாடுபடுகிறது, சமூகமே அரண்டும் மிரண்டும் போயிருக்கிறது, இந்நிலையில் அப்பெண்ணின் ஆடையைப் பற்றியும், நடத்தையினையயும், நண்பர் வட்டத்தைப் பற்றியும், ஆண் சமூகமா பெண் சமூகமா, மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்பது போன்ற அற்ப விவாதங்களை முன் வைத்து அலங்கோல அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு உயிரின் ஒழுங்கைப் பற்றி வாதிடும் நீங்களெல்லாம் ஒழுங்கு மிக்கவர்கள் என்று நினைப்போ? பிரேதமாக இருப்பினும் பெண்ணாக இருந்தால் விமர்சிக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணமோ?! பாதிக்கப்பட்டது பெண்ணாக இருப்பின், அவள் மீது என்ன தவறிருக்கிறது என்று ஆராயும் அல்ப மானுட புத்தியோ? பெண்கள் பாதுகாப்பாக இருக்க பெண்களுக்கே விதிமுறைகள் இடும் ஆணாதிக்க வர்க்கமோ?! அது சரி! காடுகளை அழித்த பாவத்திற்கு, மரம் வளர்ந்தது தவறென்று அதன் மீதே பழி போடும் மாமனிதர்கள் தானே நாம்!

இதே மாதிரியான ஒரு ‘விபத்து’ (ஆம்! உங்களைப் போன்ற, கருணை இல்லாதவர்களால் கட்டமைக்கப்பட்டச் சமூகத்தினால் நேர்ந்த விபத்து தான் இந்த சம்பவம்). தங்களுக்கு நேராதவரையில் தான் இதுபோலான அறிவார்ந்த (நன்றி, வஞ்சப்புகழ்ச்சி அணி) வாதங்கள் எல்லாம் அனுமதிக்கப்படும். இப்படியே நீடித்தால், நாளை உங்களுக்கும் இதே நிலை தான் என்பதனை நினைவினில் நிறுத்துங்கள்!

அடிப்படைகளில் தவற்றை வைத்துக் கொண்டு அடுப்படிகளையும் அரசாங்கத்தையும் மட்டும் குறை கூறுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! இன்றைக்கு சுவாதி; நாளைக்கு நாமாகவே கூட இருக்கலாம். சாந்தி அடைய வேண்டிய ஆத்மாவினை களங்கப்படுத்துவதைக் கைவிடுங்கள்.

குற்றவாளிக்கான தண்டனையை நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். இச்சமூகம் உருவாகக் காரணமாக இருந்த உங்களை மாற்றிக்கொள்ளும் முடிவினை நீங்கள் எப்பொழுது எடுக்கப்போகிறீர்கள்? மனிதன் கட்டமைத்த இச்சமூகம், மனிதனைக் காப்பதற்காக எப்போது வழிவகுக்கப் போகிறீர்கள்?!

நாம் ஏற்படுத்திய சமூகத்தின் வெளிப்பாடு தான் இதுவென்பதை உணருங்கள்! குற்றவாளிகளுக்கான முக்கிய காரணம் அவன் சார்ந்திருக்கும் சமூகமே. எனக்கு குற்றவியல் பாடம் எடுத்த ஆசிரியர் திரு. பிச்சைப்பிள்ளை அவர்கள் அடிக்கடி சிக்மன்ட் பிராய்டின் கோட்பாடுகளை மேற்கோளிடுவார். குற்றங்களையும் தண்டனைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், ‘இப்படிப்பட்ட ஒரு சமூகத்த உருவாக்க காரணமா இருந்த உங்கள தானே முதலில் தண்டிக்கணும்?’ என அவர் கேட்ட கேள்வி இன்னும் நினைவிருக்கிறது. மனிதர்களால் கட்டமைக்கப்படும் சமூகமே மனிதனால் ஏற்படும் அத்துணை குற்றங்களுக்கும் காரணம் என்பது அவரது முடிவு. அந்த வார்த்தைகளின் ஆழம் இப்பொழுது இன்னும் நன்கு விளங்குகிறது.

கர்ப்பிணிப்பெண் சிரமப்பட்டாலும் பேருந்தில் இடமளிக்க மாட்டோம், வயோதிகர் நொந்துபோனாலும் கண்டும் காணாமல் காதுகளில் ஒலிப்பான்களை அடைத்துக்கொள்வோம், ஒருவர் செய்த தவற்றிற்கு அவரது அன்னையை ஆபாசப்படுத்துவோம், தவறெனத் தெரிந்தும் தவறாமல் பலவற்றை (பட்டியலுக்கு இப்பதிவு போதாது) தினந்தோறும் செய்வோம். இருப்பினும், தவறொன்று நேர்கையில், தடியை நம் கைகளில் ஏந்தி நடுவர்களாகி விடுவோம்!

கொலையாளி... ஐயோ சாரி.... குற்றவாளி, (இதுக்கும் சண்டைக்கு வருவாங்களோ!) தண்டிக்கப்பட வேண்டியவன் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் குற்றங்களை எப்படி குறைக்கப் போகிறோம்? தண்டனையளியுங்கள் குற்றவாளிக்கு, சீர்திருத்துங்கள் (மதத்தளவில் அல்ல, மனதளவில்) தங்களையும் தத்தமது சமூகத்தையும். (இதையும் சாதி பஞ்சாயத்து ஆக்கிடுவாங்களோ!)

முன்பெல்லாம் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோக்கள் ஓடின. இன்று? காசு இருந்தாலும் ஆட்டோவில் செல்ல பயம் நிலவும் நிலை. எந்தப் பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவளுக்கு பாலியல் ரீதியான இன்னல் நேர்ந்திருக்கும். பேருந்தில் பயணிக்கையில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், நண்பன் பெயரில் வந்த அரக்கர்கள், காதலின் பெயரில் நடந்த கொடுமைகள், குடும்ப உறவினர்கள், இதெல்லாம் போதாதென்று இக்காலத்தில் சந்திக்கும் வலைத்தள தொந்தரவுகள். நம் வாழ்க்கையில் சந்திக்கும் பெரும்பாலான ஆண்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பெண்ணிற்கு இன்னல்களை அளித்திருக்கிறார்கள் என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.

சமீபத்தில் வெளியான இறைவி திரைப்படத்தினைப் பார்த்து அங்கலாய்த்த நாக்குகளெல்லாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பெண்ணிற்கு தன்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, தனக்கு மட்டும் தான் அவள் சொந்தம்! ‘என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்’ என்று நினைக்கும் ஆண்களுக்கு ‘என் புருஷன் எனக்கு மட்டும் தான்' என்று எண்ணும் பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்கள் செய்தால் விபச்சாரம், ஆண்கள் செய்தால் கலாச்சாரம்! (என்னங்கடா உங்க லாஜிக்கு?!)

பெண், ஒரு ஆணுக்கு எல்லா விதத்திலும் தேவை என்பது உண்மை தான் போலும்! ஒருவரைச் சாடுவதற்குக் கூட நமது உத்தமபுருஷர்களுக்கு பெண்ணும் அவளது உறுப்புகளும் தேவைப்படுகின்றனவே! ('நடத்த கெட்டவ எப்டி பேசறா பாரு’ ன்னு சொல்வாங்களோ?) இந்த விஷயத்தில், ‘பெரும்பான்மையான / சிறுபான்மையான’ ஆண்கள் என்று நான் குறிப்பிட அவசியமில்லாது போனது எவ்வளவு பெரிய அசிங்கம்!

இப்படி, சின்னச்சின்ன செயல்பாடுகள் தான் ஒட்டு மொத்த வடிவெடுத்து இன்று கொலையில் வந்து முடிகிறது. பணத்தைச் சம்பாதிக்கக் கற்றுத் தரும் தற்கால கல்வித்திட்டம், சகமனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதனை சொல்லித்தர மறந்து விட்டது. மாரல் சைன்ஸ் வகுப்புகளெல்லாம் இன்று பேச்சுக்குக் கூட நடப்பதில்லை. ‘மை கிட்ஸ் ஆர் ஸ்டடியிங் இன் அப்ராட்’ எனச் சொல்ல விரும்பும் பெற்றோர்கள் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் தலையாயக் கடமையை மறந்து விட்டார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய், மேற்கத்திய பெண்ணியத்தை நம் நாட்டில் திணித்துக் கொண்டு பெண்களும் திணறிக்கொண்டிருக்கிறோம். பார்வையை திருத்தும் கருவியாக செயல்படுவதை விட்டு விட்டு, ஆடைச்சுதந்திரத்திற்காகவும், அற்ப போதைக்காகவும் அல்லவா பாடுபடுகிறோம்? (இப்போ பொண்ணுங்களும் என்ன திட்டுவாங்களோ?!)

ஊடக விசாரணையால் (Media Trial), கேடான விளைவுகளை மட்டும் தான் அளிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று! ‘அடிடா அவள உதடா அவள வெட்றா அவள’, ‘அவ ஷேப்பு அப்பபாப்பாப்பா’ போன்ற பாடல்களுக்கு விசிலடித்து விட்டு, இன்று பேஸ்புக்கில் திரைப்படங்களை மட்டும் சாடிக்கொண்டிருகின்றனர். சில நல்ல படைப்புகளுக்கே கொடிப் பிடித்து மறுப்பு தெரிவித்த நீங்கள், இம்மாதிரியான படைப்புகளையும் தடுக்கலாமே? எல்லாம் ஒரு சில மாதம் கூவிவிட்டு, மறுபடியும் பருப்பு வடை செய்முறை கதை தான்!

இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் வெளியில் வந்தால், அதனையும் துச்சப்படுத்துவது இயல்பாகிவிட்டது! நல்லவளோ கெட்டவளோ, அனைத்து விதமான பெண்களுக்கும் இங்கு துச்சமாக ஒரு பெயருண்டு! (பட்டியலிட தேவையில்லை!)

பெண் எனப்படுபவள் போற்றுதலுக்குரியவள், பெண் எனப்படுபவள் கடவுளின் பரிசு, பெண் எனப்படுபவள் புனிதமானவள், பெண் எனப்படுபவள் குடும்பத்தின் குத்து விளக்கு – ‘இப்படி எந்த ஈர வெங்காயமும் எங்களுக்கு வேணாம்!’. பெண்ணை சகமனிதியாக, தோழியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அது போதும்.

                                                      - வசு.



Saturday 2 April 2016

உடலதிசயம்!

பொதுவாக ஜுரம் தலைவலி என்றால் உடலுக்கு குளிரூட்டும் பண்டம் எதையும் எடுத்துக்கொள்ளத் தோன்றாது. இம்முறை ஜுரம் வந்தபோதோ, குளிர்ந்த/ குளிரூட்டும் பதார்த்தங்களையே உடலும் மனமும் விரும்பிக்கொண்டிருந்தன. ‘வெந்நீரை மட்டும் குடி’ என்ற அம்மாவின் அதட்டல்களையும் மீறி குளிர்ந்த பானங்களையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சூடான உணவின் மீது எரிச்சல். என்னடா இதுவென்று வியந்து கொண்டிருந்த நிலையில் தான் அம்மை போட்டிருக்கிறது என்பதனை மருத்துவர் கண்டறிந்தார். சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது என்பதனை மருத்துவர் கூறும் முன்பே எனது உடல் எனக்கு உணர்த்தியதை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது!
அம்மையின் தாக்கத்தை விட, உடல் அளித்த வியப்பு தான் எனக்கு மிகுதி. உடலை நன்கு கவனித்தபோது தான் புரிந்தது, தனக்கான தேவைகளை, தான் சரியாக செயல்படுவதற்கு வேண்டிய காரணிகளை தாமே அறிந்து நமக்கு குறிப்பளிக்கிறது மனித உடல். குறிப்பினை அறிய விடாமல் தடுப்பது நமக்கு எல்லாம் தெரியும் என்ற அதிமேதாவித்தனம் தான்.
இவ்வுலகத்தில் தாமாகவே இயங்கும் சிறந்த இயந்திரம், மனித உடல்! கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான தாதுக்களும், கர்ப்பிணிகளின் மலச்சிக்கலை தீர்க்க கூடிய வைட்டமின்களும் நிறைந்தது மாங்காய். இதனை நன்கறிந்த மனித உடல், கர்ப்பிணிகளை மாங்காய்க்கு ஏங்க வைத்து விடுகிறது.
மாதவிடாய் காலத்தில் சில ஹார்மோன்களின் காரணமாக மன அழுத்தம் மிகுந்து இருக்கும். அந்த ஹார்மோன்களை அமைதிப்படுத்தி மூளையினை சாந்தமாக வைக்கும் தன்மை கொண்டது சாக்லேட் மற்றும் இனிப்பு பண்டங்கள். மாதவிடாய் நாட்களில் மாதர்களை சாக்லேட் பக்கம் தள்ளுவதும் உடலின் தேவை தான்.
இரத்தசோகை உள்ளவர்கள் அரிசியினை அதிகம் விரும்புவதற்கும் உடலின் தன்மை தான் காரணம். உடலின் இரும்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமை அரிசியில் உள்ளது. அதுமட்டுமல்லாது, இரத்தசோகையினால் உண்டாகும் சோர்வினைச் சீர் செய்ய, அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் பெரிதும் உதவுகிறது.
இதுபோன்ற எத்தனையோ தருணங்களில் தமக்குத் தேவையானதை தாமே நிறைவேற்றிக்கொள்கிறது மனித உடல். தேவை இல்லாதவற்றை உடலில் செலுத்தும்போது அதனை வெளியேற்றவும் உடலுக்கு நன்கு தெரியும். ஒத்துக்கொள்ளாத உணவினை உண்கையில் வயிறு கெடுவதும், வாந்தி அல்லது பேதி ஆன பின்பு தாமாகவே உடல் சீராவதும் நாம் பல முறை உணர்ந்திருப்போம்.
உணவின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் நமது உடல் கில்லாடி. சில சமயங்களில் ரெண்டு இட்லிகளுக்கு மேல் சாப்பிட இயலாது. சில சமயங்களில் பத்து இட்லிகளுக்கு மேல் உண்டாலும் போதாது போல் தோன்றும். இவையெல்லாம் சின்னச் சின்ன சமாச்சாரங்கள் என்று நாம் எண்ணினாலும், உடலுக்கான தேவையினை தாமே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது என்பது ஆச்சர்யமளிக்கும் சங்கதியே!
வளர்ந்து வரும் டயட்டிங் கலாச்சாரம் நமது உடலுக்கு எதிர்மறை விளைவுகளை அளித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. டயட்டிங் என்ற பெயரில், உடல் நமக்கு அளிக்கும் குறிப்புகளை உதாசீனப்படுத்தி, பட்டினி கிடந்து நம் உடலுக்குத் தேவையான மூலப்பொருட்களை கிடைக்க விடாமல் தடுப்பதனால், உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப் படுகிறது.
இதற்கு பதில், பத்தியமாக உணவெடுத்துக் கொண்டோமெனில் உடல் தனக்குத் தேவையானவற்றை நமக்கு குறிப்பளித்து விடும். எவ்வளவு சிறந்த இயந்திரமாயினும் அவ்வப்போது எண்ணெயிட்டு தானே ஆக வேண்டும்!
உடலின் குறிப்புகளை நாம் அறியத் தவறி ஆங்கில மருந்தினை எடுத்துக்கொள்கையில் அம்மருந்தே உடலின் மொழியை அழித்துவிடுகிறது. வாந்தி எடுத்தால் தான் வயிறு சரியாகும் என்கிற சில நிலைகளில், ஆங்கில மருந்து மூலம் வாந்தியைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது நமது உடல் பழுதடைகிறது.
பெரிய நோய்கள் பலவற்றைச் சீர் செய்ய ஆங்கில மருந்து உதவுகிறது என்றாலும், தொட்டதற்கெல்லாம் மாத்திரைகளை விழுங்க நினைத்தால், நமது அதிசய இயந்திரத்திற்கு வேலையே இல்லாமல் போய், துருப்பிடித்து விடும்.
நம் உடலில் ஏற்படும் எந்த ஒரு நோயும் இயற்கையாக வருவது அல்ல என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு நோயினையும் எதிர்கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது என்பதனையும் அதே ஆய்வு கூறுகிறது. இதனை முன்பே கணித்த நமது சித்தர்கள் தங்களது மருத்துவக் குறிப்புகளில் ‘தன்வினை புறவினை தாழினும் மிகினும் உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே’ என்று கூறியுள்ளனர்.
உடலின் செயல்பாட்டினை பற்றி பேச பெரிய நோய்களை அறிய வேண்டிய அவசியமில்லை. நமது அனைத்து உறுப்புகளையும் அன்றாடம் கண்காணித்து, தேவையான ரசாயனங்களை தேவையான பகுதிக்கு பாய்ச்சி, தேவையில்லாதவற்றை அகற்றி சுத்தம் செய்து, அசுத்தத்தை வெளியேற்றி, பழுதடையாமல் இருக்க தாமே தம்மை கவனித்துக்கொள்ளும் நம் உடல், ஒரு உலகையே உள்ளடக்கி வைத்துள்ளது.
மனித உடல் மட்டுமல்லாது மற்ற விலங்குகளுக்கும் இந்த தன்மை உள்ளதாய் ஆய்வுகள் கூறுகின்றன. செரிமான பிரச்சனை இருந்தால் தானாகவே புல் உண்ணுமாம் நாய். வயிற்றுப்பிரச்சனை இருந்தால் மண்ணைத் தின்னுமாம் கிளி. சுலபமாகப் பிரசவிக்கப் புதர்களில் உள்ள தண்டுகளையும் இலைகளையும் எடுத்துக்கொள்ளுமாம் யானை. எப்பொழுது என்ன உண்ண வேண்டுமென்று மனிதர்களை விட பிற விலங்குகளுக்கு நன்கு தெரியுமாம்! அது சரி! இயற்கையை உதாசீனப்படுத்த மனிதர்களைப் போல் மற்ற விலங்கினங்களுக்கு ஆறாவது அறிவு இல்லையே!
இந்த இயந்திரத்திற்கு மருந்து வேண்டுமானால் நாம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதன் இயக்கமும் செயல்பாட்டு யுக்தியும் இப்பிரபஞ்சத்தின் ரகசியங்களில் ஒன்றே! நம்மை மீறிய, நமக்கு மேலான சக்தி ஒன்று இவ்வுலகில் உள்ளதென்பதற்கு நம் உடலே சிறந்த சாட்சி!

தலைசிறந்த கட்டுமானமான மனித உடல், உலக அதிசயங்களில் ஒன்றே! நாம் எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும் நம் உடல் நமக்கு குறிப்பளித்துக்கொண்டே தான் இருக்கும்! குறிப்பினை புரிந்து, மகத்துவம் அறிந்து, இயற்கையோடு இயைந்து, நலமுடன் வாழ்வோம்!
                                              - வசு 

Sunday 13 December 2015

இயற்கையின் காஸ்ட்லி மிஷன்!

வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது. சென்னையை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். நடந்தவை எல்லாம் ஒரு கனவு போல் உள்ளது! சென்னையில் நான் இறங்கிய நாள் முதல் மழை. பயமுறுத்தும் மேகங்களைப்பற்றி அச்சத்துடன் அம்மாவிடம் அவ்வப்போது  சொல்லிக் கொண்டிருந்தபோது கூட தெரியவில்லை, பெய்யவிருக்கும் அந்த மழை,  பெருவெள்ளமாகி எவற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்று.
ஒற்றுமை, வேற்றுமை, சாதி, மதம், பண்பு, மனிதம், மக்கள், இளைஞர், நடிகர், இணையம், அரசியல், பணம், பலம் என்று எதைப் பற்றியெல்லாமோ பேசவைத்தது இந்த வெள்ளம். ஒரு யுகத்திற்கான செய்தியினை உள்ளடக்கியுள்ள நிகழ்வினை இந்த ஒரு பதிவில் தந்துவிட வேண்டுமென்று நான் எண்ணுவது பேராசை தான். இப்பதிவினை விளம்பரம் என்று நினைத்தாலும் சரி, வீண் பேச்சு என்று நினைத்தாலும் சரி, என் கண்களால் கண்டு, மனதால் உணர்ந்த காட்சிகளைப் பதிவு செய்வதில் தவறேதும் தெரியவில்லை.
தப்பித்தால் போதும் என்று தத்தளித்துக் கொண்டிருந்த என்னை, நண்பர் ஒருவர் மீட்டு பத்திரமான இடத்தில் கொண்டு சேர்த்த போது கூட தெரியவில்லை இந்த வெள்ளத்தின் ஆழம்! மனதை உலுக்கிய சில காட்சிகளும், ஜீரணிக்க முடியாத செவி வழிச் செய்திகளும், பாரபட்சம் பாராமல் தம்மால் முடிந்தவரை உதவிக்கொண்டிருந்த மக்களும், நீ என்ன செய்யப் போகிறாய் இந்த நகரத்திற்காக என்று கேட்பது போல் இருந்தது. பிரார்த்தனையைத் தவிர வேறேன்ன செய்ய முடியும் என்னால் என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில் தான், உதவிக் கேட்டு போடப்பட்டிருந்த ஃபேஸ்புக் பதிவுகள் கண்ணில் பட்டன. உதவி புரிபவரையும் உதவி கேட்போரையும் அப்படியே ஒருங்கிணைக்க ஆரம்பித்து, களத்தில் இறங்கிய நிமிடம் புரிய ஆரம்பித்தது வெள்ளத்தின் ஆழம் மட்டுமல்ல மனித மனங்களின் ஆழமும் கூட!
பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; நண்பரின் நிலை தெரியவில்லை; உணவில்லை, உடுப்பில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் எனக்கு செய்தி அனுப்புகையில் எப்படியாவது இவர்களை கவலையிலிருந்து மீட்டு விட வேண்டும் என்பதைத் தவிர மனதில் வேறு சிந்தனை இல்லை.
நான் தங்கியிருந்த தோழியின் வீட்டில் என்னைப் பத்திரமாக பார்த்துக்கொண்டார்கள். நானும் எனது தோழியும் இணைந்து மீட்பு பணிகளையும் உதவிகளையும் செய்து கொண்டிருந்தோம். இரவில் கூட தூக்கம் என்பதை மறந்திருந்தோம். இருப்பினும், அன்பான மனிதர்கள் சூழ  இருக்க நல்ல இடம், சுத்தமான உணவு கிடைக்கப்பெற்ற நான், என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்ந்தேன். அத்தியாவசியப் பொருட்கள் கூட ஆடம்பரப் பொருள் போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அந்த நாட்களில் தான்.
தெரிந்தோர் தெரியாதோர் அறிந்தோர் அறியதோர் என நான் பேசிய அத்துணை மனிதர்களும் எனக்கு முக்கியமானவர்களாகத் தோன்றினர். ஆக்ஸிஜன் சிலிண்டர் முதல் சானிடரி நாப்கின் வரை, தேவையான இடங்களில் கொண்டு சேர்க்கும் வரை நாங்கள் எங்களின் தேவைகள் மறந்தோம். இந்தப் போராட்டத்தில், இந்த வெள்ளம் நம்மிடம் எண்ணிலடங்கா நல்ல உள்ளங்களையும் ஆயுளுக்குமான ஆசிர்வாதங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
யாரென்றே அறியாத இந்த பெண்ணிற்கு செய்யப்பட்ட அலைபேசி ரீசார்ஜ்கள், பணப்பரிமாற்றம், வாகன உதவி, வாழ்த்துச் செய்திகள், அனைத்திற்கும் மேலான பிரார்த்தனைகள், அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட, நான் வணங்கும் தெய்வம் என்னை நன்றாக வைக்க வேண்டும் என்று வேண்டிய  நல் உள்ளங்கள், என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை மட்டுமே  நம்பி உதவ முன்வந்தோர் என, இச்சமூகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள அனைத்து காரணிகளையும் அடித்துக் கொண்டுவந்து நம்மிடம் சேர்த்துவிட்டது இந்த வெள்ளம்.
கர்ம வினைகளைப் பற்றி தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் இந்த வெள்ளமும் கர்மாவின் செயல் தானோ என்று சிந்திக்கத் தோன்றியது. சுற்றோரை நம்ப இயலாமல் இருந்த சூழ்நிலைகள், சகிப்புத்தன்மையற்ற நாடென்ற பழி, எதற்கும் உதவா இக்கால இளைஞர் கூட்டம், பணம் படுத்திய பாடு, தொழில்நுட்பம் செய்த ஆட்சி, நெறி தவறிய அரசியல், எல்லை மீறிய தலைவர்கள், பண்பு மறந்த மக்கள், இயற்கையை மறந்த கூட்டம், உடைந்து கொண்டிருந்த குடும்பக் கட்டமைப்பு என நழுவிக் கொண்டிருந்த வாழ்க்கையின் பிடிமானங்களை ஒரே மூச்சில் சீர் செய்ய வந்ததோ இந்த வெள்ளம்.
செய்த தவற்றிற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் தெரியவில்லை. இழைக்கப் பெற்ற களங்கங்களைத் துடைக்க வந்த கருவியாகவே வந்தது இந்த வெள்ளம். பத்து வருடப் பகை மறந்து பேசிய நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரன் காட்டிய பரிவு, பாதுகாப்புக்காகத் திரண்ட படை, காண்போரிடம் எல்லாம் கண்ட கருணை, களத்தில் இறங்கிய பெண்கள், அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய உதவிய ஆண்கள், திறக்கப்பட்ட கதவுகள், உடைக்கப்பட்ட தடுப்புகள், ஹிந்துவிற்குப் பிறந்த யூனுஸ், முசல்மானுக்குப்  பிறந்த கணேஷ், பகிர்ந்துண்ணப்பட்ட அன்னம், பகிர முடியாத உணர்வுகள், இன்னும் எத்தனை எத்தனை! ‘நல்லா இருக்கியா? எதும் வேணுன்னா தயங்காம கேளு’ என்ற வார்த்தைகளுக்குள் இருந்த ஆழம், வெள்ளத்தின் ஆழம் தந்த பய உணர்வைக் குறைத்து விட்டது!
இணையம் பழுதடைந்தாலும் மக்கள் இணைந்திருந்தனர். பணமிருந்த ஏடிம்கள் தகுதி இழந்திருந்தாலும், பண்பும் அன்பும் மிகுந்திருந்தது. இத்தனைக்கும் நடுவில் திருஷ்டி போல் சில செயல்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருந்தன. சூழ்நிலையை அரசியலாக்கி, அரசியலை அசிங்கமாக்கி, உதவிய பெண்களின் அலைபேசி எண்களைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்யான வதந்திகளைக் கிளப்பி, விவகாரத்தை விளையாட்டாக்கி விரக்தி அடையும்படி சிலர் நடந்துக்கொள்ளத்தான் செய்தனர். ஆனால், பிறரைக் காப்பாற்றத் தன் உயிரைவிட்ட இளைஞர்கள், பிறர் குடும்பத்திற்காக தன் குடும்பத்தினை மறந்திருந்த மக்கள், எங்கிருந்தோ வந்த ராணுவ வீரர்கள், தூங்காது உதவிக் கொண்டிருந்த வெளிநாட்டு/மாநில வாழ் மக்கள், கலங்காதீர்கள் பெண்களே நங்கள் இருக்கிறோம் என்று, ஏற்பட்ட இன்னல்களை சரி செய்ய வந்த என் சகோதரர்கள்! இவர்களுக்கு முன்னால் எந்த ஒரு இன்னலும் மின்னலாய் மறையுமன்றோ!
இயற்கையின் இந்த மிஷன் கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும், பல ஆயிரம் கோடி ஒதுக்கியும் சுத்தம் செய்யமுடியாமல் இருந்த கூவத்தின் நிலை, இரண்டே வாரங்களில் தலைகீழாய் மாறிப்போயிருக்கிறது. இங்கு சுத்தம் செய்யப்பட்டது கூவம் மட்டுமல்ல! இந்நிலையில், இப்படியொரு மிஷனில் நம்மையும் ஒரு மெஷினாய் சேர்த்துக்கொண்ட இறைமைக்குதான் நன்றி கூற வேண்டும்.
எல்லைகளைத் தாண்டி மனிதம் பயணிக்கப்பட்டதற்கான சான்று, இந்த சென்னை மழை வெள்ளம்! பல நாடுகளிலிருந்து, பிற மாநிலங்களிலிருந்து, மற்ற ஊர்களிலிருந்து உதவிக்காக வந்து குவிகின்ற மக்களும், பொருட்களும், இந்த வானத்து நட்சத்திரங்களை விட அதிகம்! அனைவரும் சேர்ந்து சென்னையைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சீராட்டுகின்றனர்!
அனைவரிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தன் தெருவில் உள்ளோர்க்கு உணவளிப்பது, தேவைப்பட்டோருக்கு பணம் உதவியும், இணைய உதவியும், இலவச வாகன உதவியும் அளிப்பது, என்று தன்னால் முடிந்த வரையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை மக்களும் தயங்காமல் உதவிகளைப் பரிமாறிக் கொண்டனர். இருப்பவன் இல்லாதவன் என்ற பாரபட்சமெல்லாம் இங்கில்லை. இருந்தால் கொடுக்கிறேன், இல்லையென்றால் பிறருக்கும் சேர்த்து வாங்கிக் கொடுக்கிறேன் என்ற  மனிதம் மட்டும் தான் நிலைத்திருந்தது. அந்த களத்தில் அனைவருமே பெரிய மனிதர்கள் தான்! இதில் பெரிய உதவி சின்ன உதவி என்றெல்லாம் பிரித்துக் காண்பித்தால், அது தான் சிறுமை.
இழக்கக்கூடாத, அறிய செல்வங்களை எல்லாம் நாம் பெற்றுவிட்ட இந்நிலையில், இழந்த பொருட்களைச் சம்பாதித்துக்கொள்வது கடினமல்ல! இந்த மனநிலை மாறாமல் மனித நிலையினை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் இப்பொழுது பலருடைய பிரார்த்தனையாக உள்ளது! ஒவ்வொரு வருடமும் பாரதியின் பிறந்த நாள் அன்று ‘இந்த சமூகத்த பாக்கறதுக்கு முன்னாடியே நல்ல வேளை அந்த மனுஷன் செத்து போனான்’ என்று தான் தோன்றும். இந்த முறையோ, ‘இன்னொமொரு நூற்றாண்டேனும் உயிரோட இருந்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பானே அந்த மனுஷன்’ என்று தான் தோன்றுகிறது!
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியென பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!

வாழ்வாதாரத்தை பிடிங்கிக்கொண்டது போல் தோன்றினாலும் வாழ்தலை சொல்லிக்கொடுத்துவிட்டது இந்த வெள்ளம். அடுத்து எப்பொழுது பேசுவோம்/ சந்திப்போம் என்று நிச்சயமில்லாத இச்சூழலில், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் நம் மனத்தையே கருப்பை எனக்கொள்வோம். அதில் அன்பை மட்டுமே விதைத்து, அதனையே அறுவடையும் செய்வோம், வாரீர்!
                                                                                                 -    வசு

Friday 25 September 2015

உடை!

உடலை மறைப்பதற்காக உடுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை, உடுத்தல் எனும் வழக்கம் பல வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
பெண்களின் உடுத்தல் பற்றி விமர்சித்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ் இதழைப் பற்றி அனைவரும் அறிவோம். இவ்வகையான சர்ச்சைகள் அனைத்தும் நமக்கு உரக்கக் கூறுவது நாகரீகத்தையோ கலாச்சாரத்தைப் பற்றியல்ல. மாறாக, சமூக கட்டமைப்பும், பெண்களை பொருளாகப் பார்க்கும் பெரும்பான்மையினரின் அறியாமயினைப் பற்றியே வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
உடுத்தலைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு, உடையைப் பற்றியும் அதன் பின்னணிப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். ஆதிகால மனிதன் தன் உடலை பிற விலங்குகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவும், இயற்கையின் கால மாற்றங்களை தாங்கிக்கொள்ளவும், இன்ன பிற அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும் வடிவமைக்கப் பட்டதே ‘உடை’. அதுவே காலடைவில் நாகரீகமாக கருதப்பட்டு, வாழ்க்கைத் தரத்தின் அடையாளமாகவும் மாற்றப்பட்டு விட்டது.
இருக்கும் சூழலுக்கேற்ப, வசிக்கும் சுற்றுசூழலுக்கு ஏற்ப, மக்கள் ஆடைகளை வடிவமைத்துக் கொண்டார்களே தவிர ஆபாசம் என்ற அளவு கோலினை வைத்து ஆடைகள் வடிவமைக்கப்படவில்லை.
இன்னும் சொல்லப் போனால், ஒரு நாட்டிற்கென தனி உடை என்பதும் கிடையாது. காலத்திற்கேற்ப, வசதிக்கேற்ப உடைகள் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன.
இலை தழைகளை கொண்டு உடுத்திக் கொண்ட காலம் மாறி, தோலினை கொண்டு உடுத்தும் காலம் வந்தது, முக்கியப் பாகங்களை மட்டும் மறைத்துக் கொண்ட காலம் மாறி முழுக்க போர்த்திக் கொள்ளும் காலம் வந்தது, ரவிக்கை அணிய மறுத்த பெண்கள் மாறி முழு நீள ரவிக்கைகள் காட்சியளித்தன, சுற்றிக் கொள்ளும் புடவை மாறி பற்றிக்கொள்ளும் சுடிதார் இலகுவாய் இருந்து, காற்றில் பறக்கும் துப்பட்டாக்களை விட கட்சிதமாய் இருக்கும் சட்டை வசதியாய் இருக்கிறது.
இப்படி பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் உடை என்பது வசதிக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இருப்பினும் பெரும்பாலும் விமர்சிக்கப் படுவது பெண்களின் உடைகள் தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
உடை என்பது தனி மனித விருப்பம் தொடர்பான வழக்கமே தவிர ஒரு சமூகத்தின் குறியீடல்ல. கலாச்சாரங்களையும் வழக்கங்களையும் வசதிகளையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொண்டு அருவருப்பான விமர்சனங்களைத் தருவது, எந்த ஊடகத்திற்கும் அழகல்ல.
கண் கூசும் உடையென்று ஒருவர் கருதுவது பிறருக்கு சாதரணமாக தொனிக்கலாம். ஒருவர் அத்தியாவசியமாக கருதும் ஒரு வகை உடை, மற்றொருவருக்கு அனாவசியமாக தோன்றலாம்.
      உடைக் கட்டுப்பாடு அவசியமற்றது என்பதல்ல என் வாதம். அதனை விடவும் அவசியமானது மனக் கட்டுப்பாடு. காற்றில் களையும் முந்தானைகள், தழைந்து போகும் கொசுவங்கள், பறந்திடும் துப்பட்டாக்கள், வடிவம் காட்டும் காலுறைகள் என எல்லாவற்றிலும் ஆபாசத்தை மட்டும் காணும் மாக்கள், மடித்துக் கட்டும் வேட்டி, ஜாக்கி தெரியும் படி அணியப்படும் காற்சட்டை, முட்டி காட்டும் அரைக்கால்சட்டை, மார் காட்டும் உள்சட்டை என இவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கு என்ன?
      ஒரு உடை ஆபாசமாக இருக்கின்றதோ இல்லையோ, அதனை யாரும் அறியாமல் படம் பிடித்து வெளியிடுவது என்பது கீழ்த்தரமான செயல். சமூகத்தை சரியான வழியில் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், இப்படி கண்டதை காட்சிப்படுத்தினால், நாம்வாழும் சமூகத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை காணாமல் போய்விடும். படக்கருவியும் பேனாவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், மன்னிக்கவும்! ஊடகங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள்!  
பெண்களை, காட்சிப் பொருளாகக் காண்பது தவறெனில், அவர்களைக் காட்சிப் பொருளாக சித்தரிப்பது என்பது அதை விடக் கொடிது. உடல் என்பது வெறும் சதைப் பிண்டம் தான் என்பதனை எடுத்துரைக்க வேண்டியவர்கள் எல்லாம், பெண்களை இழிவுப் படுத்த உடுத்தலை கையிலெடுப்பது கவலையளிக்கின்றது.
இவை அனைத்தையும் தாண்டி, பெண்களுக்கு, தான் இருக்கும் சமூகம் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. ஒரு இரவில் நிகழ்வதல்ல இந்த மாற்றம். காலம் கனியும் வரை காற்றினை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.  
அடிப்படையிலேயே திருத்திக் கொள்ளத் தவறி விட்ட சமூகமாய் இருப்பின், நாளைய அடுப்பங்கரைகள் அழுகுரல்களை மட்டும் தான் எதிரொலிக்கும்.
வாலியின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா, துக்கடான்னு நீங்க எடை போட்டா, தடா.. உனக்குத் தடா!’

-    வசு

Tuesday 28 July 2015

பிழைத்திரு(க்)கலாம் !

சில்லிட்டுப் போவாய் என்று முன்பேயறிந்திருந்தால் உன்னை
ஷில்லாங்கிற்கே அனுப்பியிருக்க மாட்டோம்.

வாழத் தகுதியானது இப்பூமி என்றுரைத்து, நீயே
விலகியதில் என்ன நியாயம்?
முட்டாள்களும் மூர்க்கர்களும் முடிவில்லாமல் நிறைகையில்
முதல் குடிமகனாய், கனவின் முகமாய் இருந்த நீ  
முந்திக்கொண்டு ஏன் போனாய்?

கோள் பிடித்தாய் கோலும் பிடித்தாய், இன்று
உனக்கென கோவிலையும் பிடித்துவிட்டாய்!

உன் கனவு ஆண்டு வருமுன்னே நீ
கனத்துப் போவதுதான் முறையா?
நீ அனுப்பிய ஏவுகணைகளுக்கும் துணையிருக்க 
நீயே ஏவுகணையாய்ப் போனாயோ?

நீ மீட்டிய வீணை இன்று வீணாய்ப் போவதென்ன?
இளவட்டப் பார்வையினில் இன்று இருள் சூழ்ந்ததென்ன?
புவி வட்டப் பாதையிலே புகை மூண்டதென்ன?
இன்று புவி விட்டுப் பாதியிலே நீ போவதென்ன!

நீ நேசித்த குழந்தைகள் யாவும் இன்று
உம்மையே யாசித்துக் கொண்டிருக்கின்றன!
அகவை எண்பதைத் தாண்டினும் உனது அகவல்கள்
எல்லைகளைத் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
.
புண்ணிய பூமியில் பிறந்த நீ, இறந்து,
புவியினில் சூனியம் சூழவிட்டாய்!

அழக்கூட அருகதையற்ற அரசியல்வாதிகளெல்லாம் உனக்கு
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
என்ன பாவம் செய்தேனோ, உம்மைக் காணும்
முன்பே காட்சிப் பொருளாகிவிட்டாய்!

மறு ஜென்மம் ஒன்றிருப்பின் மறக்காமல் நீ பிறந்து
முறையாக நான் வந்து முறையிடவே மறையோது!

                                                                                                                 - வசு


Sunday 19 July 2015

உலகம் அத்துணை அழகானது!


‘அவன் இப்படிச் செய்து விட்டான்’, ‘இவள் அப்படிச் செய்து விட்டாள்’, ‘அங்கு நிலைமை ரொம்ப மோசம்’, ‘இங்கு ஏன் இப்படி இருக்கின்றது’ போன்ற குறைகூவல்கள் நமது காதுகளை துளைப்பது இயல்பாகிவிட்டது. உண்மையில், இவ்வுலகை இந்த அளவிற்கு மோசமானதாக காட்சிப்படுத்த எந்தவித அவசியமும் இல்லை.

பொதுவாக, நம்முடைய மனநிலையானது, நாம் வாழும் சூழலையும், நம்மைச் சூழ்ந்துள்ள மக்களையும் பெரிதும் சார்ந்திருக்கும் பட்சத்தில், குறைகளை மட்டுமே பெரிதாக்கி நமது நிம்மதியினை நாமே கெடுத்துக் கொள்கிறோம். இவ்வுலகில் மேன்மக்கள் - கீழ்மக்கள் எனும் பாகுபாடு என்பது, மாறக்கூடிய நமது விருப்பு - வெறுப்பு சார்ந்தவையே தவிர நிலையானவை அல்ல. பின்லேடனை விரும்புவாரும் உள்ளனர், காந்தியை வெறுப்பவரும் உள்ளனர்.

ஆங்கிலத்தில் Utilitarian Theory (Maximum good for the maximum number) என்றழைக்கப்படும் பயனுடைமைச் சார்ந்த கொள்கை பொறுத்தே தேவை எது? அல்லது எது தேவையில்லை? என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்முடிவுகள் யாவும் சூழல், காலம், விருப்பு, வெறுப்பு போன்ற பல காரணிகள் சார்ந்ததாகவே அமைகின்றன. நம்மை நாமே கட்டாயப்படுத்தியாவது நமக்கு வாய்த்தவைகளை விரும்பிட முயல்கையில், நம்மை அறியாமலேயே நாம் அமைதி கொள்கிறோம் என்பது தான் உண்மை.

பரெடோ விதியின் படி (Pareto’s Law) இவ்வுலகில் தீயவை என்பது 20% இருப்பின் மீதம் 80% நம்முடய மனதினைப் பொறுத்து தான் நல்லவை, தீயவை அமைகிறது. முடிவெடுக்கும் கோல் நம் கையில் இருக்கையில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம் பெரும்பாலான நேரங்களில். வானத்தில் பறப்பதும் பூமியில் இருப்பதும் அவரவர் எண்ணங்களே என்ற, பழைய பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.
வாழ்வதற்கான காரணிகளை நாம் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும், எங்கிருந்தோ மாயமாய் ஒரு காரணம் வந்து கண் முன் நிற்கும். குறைகளை மட்டுமே கூறி பயமுறுத்திக் கொண்டிருந்தோமெனில் நமது அடுத்த சந்ததியினர் தெருவில் நடக்கக் கூட விரும்ப மாட்டார்கள்.  

பெற்றோருடன் சண்டையிட்டு வரும் நேரங்களில் நண்பர்களின் தழுவலும், நண்பர்களிடம் சண்டையிட்டு வருகையில் பெற்றோரின் அணைப்பும், துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரத்தில் பார்க்கும் குழந்தையின் சிரிப்பும், சமூகமே நமக்கு எதிராய் இருக்கின்றது என்றெண்ணுகையில் கிடைக்கப்பெறும் ஆறுதல் வார்த்தைகளும், எதற்குமே நாம் லாயக்கில்லை என்று எண்ணிடும் தருணங்களில் கண் முன் வரும் அத்தனை  சாதனையாளர்களும், அவர்கள் கடந்து வந்த கடினப் பாதைகளும், நம் மனதை இதமாக்கும் இசையும் இயற்கையும், நாம் சிரிக்கக் காரணமாய் விளங்கும் சின்னச் சின்னக் காரணிகளும், இவ்வுலகை ஏற்றுக்கொள்ள வைத்து நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடுகின்றன.

இங்குப் பிரச்சினை என்னவெனில் அந்த சின்னக் காரணிகளை நாம் கவனித்திட மறுப்பது தான். காசில்லாக் காலத்தில் பகிரப்படும் பண்டங்கள், நோய்வாய்ப் படும்போது நமக்காக நடத்தப்படும் பிரார்த்தனைகள், பிரிந்து செல்கையில் அரும்பிடும் கண்ணீர்த்துளிகள், கூட்ட நெரிசலையும் தாண்டி கேட்கும் இரயிலின் சத்தம், அடைமழையின் பின் அரும்பும் அழகிய காளான்கள், ஆய்ந்த பின் கையோடு தங்கும் புதினாவின் மணம், விருப்பில்லாப் பயணங்களிலும் கிடைக்கும் புது முகங்கள், துக்க வீட்டில் தூக்கிக்கொள்ளச் சொல்லும் குழந்தையின் கைகள், தோற்கும் தருணங்களில் கிடைத்திடும் தோள்கள், தனிமையில் கேட்டிடும் காற்றின் சத்தம், போக்குவரத்து நெரிசலுக்கிடையில் கடந்து செல்லும் குருவிகளின் கூச்சல் மிகுந்த சாலை, வேகத் தடைகளின் மேல் ஏறி இறங்கையில் உணர்ந்திடும் வயிற்றின் அலைகள் என எண்ணற்ற சிறிய விஷயங்கள் நமக்கு வாழ்வதற்கான காரணங்களையும் மகிழ்ச்சியானத் தருணங்களையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கீதையில் சொல்வது போல் மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்துப் போகச்செய்யும் காலச் சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், இழப்புகள், வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், நெருங்கியோரின் சூதுகள் என இவையனைத்துமே மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் தான். இவைகளையெல்லாம் மட்டும் பிடித்துக்கொண்டு பிதற்றிக்கொண்டிருப்பதும், மீண்டு வந்து வாழ்கையில் பிடிப்பைப் பெறுவதும் அவரவர் கைகளில் இருக்கும் கோலைப் பொருத்து!

குறையே இல்லை இந்த சமூகத்தில் என்றுக் கூறவில்லை. குறையினைச் சுட்டிக் காட்டவே கூடாதென்றும் கூறவில்லை. குறையினை மட்டுமே சுட்டிக் காட்டவேண்டாம் என்பது தான் என் எண்ணம். இங்கு ஞானிகளுக்கும் கடந்த காலம் உண்டு, பாவிகளுக்கும் எதிர் காலம் உண்டு.

வெறுப்பு விடுத்து, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை இவ்வுலகு அளித்துக் கொண்டே தான் இருக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தான் நமது சூழல் அமைகிறது. அனைத்து கெட்டதிலும் நல்லதும் இருக்கிறது என்று மூத்தோர்கள் அடிக்கடி உரைப்பதை, நாமே உணரும் தருணங்கள், உணர்த்தும் பாடங்கள் பல. குறை என்றொன்று இருக்கும் வரை தான் நிறையென்பது யாதென்று நம்மால் அறிய இயலும். குறையினைக் குறைத்துக் கூறி நிறையினை நிரப்பி விட்டோமெனில், தானாக குறைபாடுகளும் குறைந்துவிடும்.

இங்கு அனைவருக்கும் இடமுண்டு. அனைவருக்கும் மக்களும் உண்டு. வெகு நாட்கள் நம் பயணத்தில் வராமல் பலர் போனாலும் அவர்கள் இருந்த நேரத்தில் நமக்காய் இருந்தத் தருணங்களும் அழகு தான்! நமக்கு அது தேவையும் பட்டது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும் நமக்கானவர்கள் இருந்துகொண்டேதான் உள்ளனர்.

அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை அனுபவிக்க தெரிந்துக்கொண்டோமெனில் ஒவ்வொரு நொடியும் நமக்கு அழகான தருணங்களை அள்ளித்தர காத்துக்கொண்டிருக்கின்றன. சும்மாவா கேட்டு வைத்தான் அந்த முண்டாசுக் கவிஞன், “காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?” என்று.

அதிகம் ஆராயாமல் அனுபவித்தோமெனில், உலகம் அத்துணை அழகானது!
                                                                   - வசு.