வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது. சென்னையை மீட்டெடுக்கும்
பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்
கொண்டிருக்கின்றனர். நடந்தவை எல்லாம் ஒரு கனவு போல் உள்ளது! சென்னையில் நான்
இறங்கிய நாள் முதல் மழை. பயமுறுத்தும் மேகங்களைப்பற்றி அச்சத்துடன் அம்மாவிடம் அவ்வப்போது
சொல்லிக் கொண்டிருந்தபோது கூட
தெரியவில்லை, பெய்யவிருக்கும் அந்த மழை, பெருவெள்ளமாகி
எவற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்று.
ஒற்றுமை, வேற்றுமை, சாதி, மதம், பண்பு, மனிதம், மக்கள்,
இளைஞர், நடிகர், இணையம், அரசியல், பணம், பலம் என்று எதைப் பற்றியெல்லாமோ பேசவைத்தது
இந்த வெள்ளம். ஒரு யுகத்திற்கான செய்தியினை உள்ளடக்கியுள்ள நிகழ்வினை இந்த ஒரு
பதிவில் தந்துவிட வேண்டுமென்று நான் எண்ணுவது பேராசை தான். இப்பதிவினை விளம்பரம்
என்று நினைத்தாலும் சரி, வீண் பேச்சு என்று நினைத்தாலும் சரி, என் கண்களால் கண்டு,
மனதால் உணர்ந்த காட்சிகளைப் பதிவு செய்வதில் தவறேதும் தெரியவில்லை.
தப்பித்தால் போதும் என்று தத்தளித்துக் கொண்டிருந்த என்னை,
நண்பர் ஒருவர் மீட்டு பத்திரமான இடத்தில் கொண்டு சேர்த்த போது கூட தெரியவில்லை
இந்த வெள்ளத்தின் ஆழம்! மனதை உலுக்கிய சில காட்சிகளும், ஜீரணிக்க முடியாத செவி வழிச்
செய்திகளும், பாரபட்சம் பாராமல் தம்மால் முடிந்தவரை உதவிக்கொண்டிருந்த மக்களும்,
நீ என்ன செய்யப் போகிறாய் இந்த நகரத்திற்காக என்று கேட்பது போல் இருந்தது.
பிரார்த்தனையைத் தவிர வேறேன்ன செய்ய முடியும் என்னால் என்று வருந்திக் கொண்டிருந்த
வேளையில் தான், உதவிக் கேட்டு போடப்பட்டிருந்த ஃபேஸ்புக் பதிவுகள் கண்ணில் பட்டன. உதவி
புரிபவரையும் உதவி கேட்போரையும் அப்படியே ஒருங்கிணைக்க ஆரம்பித்து, களத்தில்
இறங்கிய நிமிடம் புரிய ஆரம்பித்தது வெள்ளத்தின் ஆழம் மட்டுமல்ல மனித மனங்களின்
ஆழமும் கூட!
பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; நண்பரின் நிலை
தெரியவில்லை; உணவில்லை, உடுப்பில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் எனக்கு செய்தி
அனுப்புகையில் எப்படியாவது இவர்களை கவலையிலிருந்து மீட்டு விட வேண்டும் என்பதைத்
தவிர மனதில் வேறு சிந்தனை இல்லை.
நான் தங்கியிருந்த தோழியின் வீட்டில் என்னைப் பத்திரமாக
பார்த்துக்கொண்டார்கள். நானும் எனது தோழியும் இணைந்து மீட்பு பணிகளையும்
உதவிகளையும் செய்து கொண்டிருந்தோம். இரவில் கூட தூக்கம் என்பதை மறந்திருந்தோம்.
இருப்பினும், அன்பான மனிதர்கள் சூழ இருக்க
நல்ல இடம், சுத்தமான உணவு கிடைக்கப்பெற்ற நான், என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்ந்தேன்.
அத்தியாவசியப் பொருட்கள் கூட ஆடம்பரப் பொருள் போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அந்த
நாட்களில் தான்.
தெரிந்தோர் தெரியாதோர் அறிந்தோர் அறியதோர் என நான் பேசிய
அத்துணை மனிதர்களும் எனக்கு முக்கியமானவர்களாகத் தோன்றினர். ஆக்ஸிஜன் சிலிண்டர்
முதல் சானிடரி நாப்கின் வரை, தேவையான இடங்களில் கொண்டு சேர்க்கும் வரை நாங்கள் எங்களின்
தேவைகள் மறந்தோம். இந்தப் போராட்டத்தில், இந்த வெள்ளம் நம்மிடம் எண்ணிலடங்கா நல்ல
உள்ளங்களையும் ஆயுளுக்குமான ஆசிர்வாதங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
யாரென்றே அறியாத இந்த பெண்ணிற்கு செய்யப்பட்ட அலைபேசி
ரீசார்ஜ்கள், பணப்பரிமாற்றம், வாகன உதவி, வாழ்த்துச் செய்திகள், அனைத்திற்கும்
மேலான பிரார்த்தனைகள், அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட, நான் வணங்கும்
தெய்வம் என்னை நன்றாக வைக்க வேண்டும் என்று வேண்டிய நல் உள்ளங்கள், என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை
மட்டுமே நம்பி உதவ முன்வந்தோர் என,
இச்சமூகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள அனைத்து காரணிகளையும் அடித்துக் கொண்டுவந்து
நம்மிடம் சேர்த்துவிட்டது இந்த வெள்ளம்.
கர்ம வினைகளைப் பற்றி தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில்
இந்த வெள்ளமும் கர்மாவின் செயல் தானோ என்று சிந்திக்கத் தோன்றியது. சுற்றோரை நம்ப
இயலாமல் இருந்த சூழ்நிலைகள், சகிப்புத்தன்மையற்ற நாடென்ற பழி, எதற்கும் உதவா
இக்கால இளைஞர் கூட்டம், பணம் படுத்திய பாடு, தொழில்நுட்பம் செய்த ஆட்சி, நெறி
தவறிய அரசியல், எல்லை மீறிய தலைவர்கள், பண்பு மறந்த மக்கள், இயற்கையை மறந்த
கூட்டம், உடைந்து கொண்டிருந்த குடும்பக் கட்டமைப்பு என நழுவிக் கொண்டிருந்த
வாழ்க்கையின் பிடிமானங்களை ஒரே மூச்சில் சீர் செய்ய வந்ததோ இந்த வெள்ளம்.
செய்த தவற்றிற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் தெரியவில்லை. இழைக்கப்
பெற்ற களங்கங்களைத் துடைக்க வந்த கருவியாகவே வந்தது இந்த வெள்ளம். பத்து வருடப்
பகை மறந்து பேசிய நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரன் காட்டிய பரிவு,
பாதுகாப்புக்காகத் திரண்ட படை, காண்போரிடம் எல்லாம் கண்ட கருணை, களத்தில் இறங்கிய
பெண்கள், அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய உதவிய ஆண்கள், திறக்கப்பட்ட கதவுகள்,
உடைக்கப்பட்ட தடுப்புகள், ஹிந்துவிற்குப் பிறந்த யூனுஸ், முசல்மானுக்குப் பிறந்த கணேஷ், பகிர்ந்துண்ணப்பட்ட அன்னம், பகிர
முடியாத உணர்வுகள், இன்னும் எத்தனை எத்தனை! ‘நல்லா இருக்கியா? எதும் வேணுன்னா
தயங்காம கேளு’ என்ற வார்த்தைகளுக்குள் இருந்த ஆழம், வெள்ளத்தின் ஆழம் தந்த பய
உணர்வைக் குறைத்து விட்டது!
இணையம் பழுதடைந்தாலும் மக்கள் இணைந்திருந்தனர். பணமிருந்த
ஏடிம்கள் தகுதி இழந்திருந்தாலும், பண்பும் அன்பும் மிகுந்திருந்தது. இத்தனைக்கும்
நடுவில் திருஷ்டி போல் சில செயல்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருந்தன. சூழ்நிலையை
அரசியலாக்கி, அரசியலை அசிங்கமாக்கி, உதவிய பெண்களின் அலைபேசி எண்களைத் தவறாகப்
பயன்படுத்தி, பொய்யான வதந்திகளைக் கிளப்பி, விவகாரத்தை விளையாட்டாக்கி விரக்தி
அடையும்படி சிலர் நடந்துக்கொள்ளத்தான் செய்தனர். ஆனால், பிறரைக் காப்பாற்றத் தன் உயிரைவிட்ட
இளைஞர்கள், பிறர் குடும்பத்திற்காக தன் குடும்பத்தினை மறந்திருந்த மக்கள்,
எங்கிருந்தோ வந்த ராணுவ வீரர்கள், தூங்காது உதவிக் கொண்டிருந்த வெளிநாட்டு/மாநில
வாழ் மக்கள், கலங்காதீர்கள் பெண்களே நங்கள் இருக்கிறோம் என்று, ஏற்பட்ட இன்னல்களை
சரி செய்ய வந்த என் சகோதரர்கள்! இவர்களுக்கு முன்னால் எந்த ஒரு இன்னலும் மின்னலாய்
மறையுமன்றோ!
இயற்கையின் இந்த மிஷன் கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும், பல
ஆயிரம் கோடி ஒதுக்கியும் சுத்தம் செய்யமுடியாமல் இருந்த கூவத்தின் நிலை, இரண்டே
வாரங்களில் தலைகீழாய் மாறிப்போயிருக்கிறது. இங்கு சுத்தம் செய்யப்பட்டது கூவம்
மட்டுமல்ல! இந்நிலையில், இப்படியொரு மிஷனில் நம்மையும் ஒரு மெஷினாய் சேர்த்துக்கொண்ட
இறைமைக்குதான் நன்றி கூற வேண்டும்.
எல்லைகளைத் தாண்டி மனிதம் பயணிக்கப்பட்டதற்கான சான்று, இந்த
சென்னை மழை வெள்ளம்! பல நாடுகளிலிருந்து, பிற மாநிலங்களிலிருந்து, மற்ற
ஊர்களிலிருந்து உதவிக்காக வந்து குவிகின்ற மக்களும், பொருட்களும், இந்த வானத்து
நட்சத்திரங்களை விட அதிகம்! அனைவரும் சேர்ந்து சென்னையைத் தன் தோளில் போட்டுக்கொண்டு
சீராட்டுகின்றனர்!
அனைவரிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தன் தெருவில்
உள்ளோர்க்கு உணவளிப்பது, தேவைப்பட்டோருக்கு பணம் உதவியும், இணைய உதவியும், இலவச
வாகன உதவியும் அளிப்பது, என்று தன்னால் முடிந்த வரையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ
அத்தனை மக்களும் தயங்காமல் உதவிகளைப் பரிமாறிக் கொண்டனர். இருப்பவன் இல்லாதவன்
என்ற பாரபட்சமெல்லாம் இங்கில்லை. இருந்தால் கொடுக்கிறேன், இல்லையென்றால் பிறருக்கும்
சேர்த்து வாங்கிக் கொடுக்கிறேன் என்ற மனிதம்
மட்டும் தான் நிலைத்திருந்தது. அந்த களத்தில் அனைவருமே பெரிய மனிதர்கள் தான்! இதில்
பெரிய உதவி சின்ன உதவி என்றெல்லாம் பிரித்துக் காண்பித்தால், அது தான் சிறுமை.
இழக்கக்கூடாத, அறிய செல்வங்களை எல்லாம் நாம் பெற்றுவிட்ட
இந்நிலையில், இழந்த பொருட்களைச் சம்பாதித்துக்கொள்வது கடினமல்ல! இந்த மனநிலை
மாறாமல் மனித நிலையினை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் இப்பொழுது பலருடைய
பிரார்த்தனையாக உள்ளது! ஒவ்வொரு வருடமும் பாரதியின் பிறந்த நாள் அன்று ‘இந்த
சமூகத்த பாக்கறதுக்கு முன்னாடியே நல்ல வேளை அந்த மனுஷன் செத்து போனான்’ என்று தான்
தோன்றும். இந்த முறையோ, ‘இன்னொமொரு நூற்றாண்டேனும் உயிரோட இருந்திருந்தா சந்தோஷப்
பட்டிருப்பானே அந்த மனுஷன்’ என்று தான் தோன்றுகிறது!
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியென பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!
வாழ்வாதாரத்தை பிடிங்கிக்கொண்டது போல்
தோன்றினாலும் வாழ்தலை சொல்லிக்கொடுத்துவிட்டது இந்த வெள்ளம். அடுத்து எப்பொழுது பேசுவோம்/
சந்திப்போம் என்று நிச்சயமில்லாத இச்சூழலில், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் நம்
மனத்தையே கருப்பை எனக்கொள்வோம். அதில் அன்பை மட்டுமே விதைத்து, அதனையே அறுவடையும்
செய்வோம், வாரீர்!
-
வசு