Thursday, 31 July 2014

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்!

மிட்டாய் வேண்டும், பலூன் வேண்டும், பொம்மை வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டிய குழந்தைகளெல்லாம் இன்று ஐ பாட் வேண்டும், அன்ட்ராய்டு கைப்பேசி வேண்டும், காலக்சி டாப் வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கைக்குழந்தையும் கைபேசிக் கேட்கிறது! இந்தக் கருவிகளில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் பத்து வயது குழந்தை கூட நன்றாக தெரிந்து வைத்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், நமக்கு ஏதும் பயன்பாட்டில் சந்தேகம் எழுந்தால் கூட குழந்தைகள் தீர்த்து வைக்கிறார்கள். ‘முகநூலில்  கணக்கு வைத்து உள்ளீர்களா?’ என்று ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் என்னைக் கேட்டு, என் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் இணைய அடுத்த நாளே விண்ணப்பம் அனுப்புகிறான். பத்து வயது சிறுவன் எனது நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வயது குறைந்தது போல் இருக்கிறது என்றாலும், அந்த வயதிற்கான விளையாட்டுகளை விட்டு விட்டு இவன் முகநூலில் என்ன செய்கிறான் என்ற பதட்டமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது! கண்ணாமூச்சி விளையாடி ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்க வேண்டிய வயதில் இன்று இணையத்தில் தனது நண்பர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் களைப்புற வேண்டிய பிள்ளைகள், இன்று ஏதோ ஒரு கோயில் ஓட்டத்தில் அரக்கனுடன் ஓடிக் கழுத்து வலி என்று புலம்புகிறார்கள். குழந்தைகளைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. ஐபாடு, முகநூலை விடவும் நம்மால் அவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்க முடிவதில்லை. ‘அலுவல்’ என்று ஒற்றை வார்த்தையில் காரணம் சொல்பவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீங்கள் உழைக்கும் அந்த உழைப்பு உங்கள் குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தை பிடிங்கிக் கொள்ளும் அசுரனாய் அமைந்து விடக் கூடாது. “என் ஆறு வயது மகனுக்கு கைப்பேசியைப் பற்றி அனைத்துமே தெரியும்”, “என் பதினோரு வயது மகளுக்கு இப்பொழுதே அவள் முகபுத்தக கணக்கில் அவ்வளவு நண்பர்கள்!” என்று கூறுவதில் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், மன்னிக்கவும்! இவை அனைத்தும், உங்கள் பிள்ளைகள், குழந்தைத்தனத்தை இழந்து உங்களை விட்டு மெல்ல விலகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அறிகுறிகளே. ஓடி விளையாடுவதில் கிடைக்கும் உடல் வலுவும் கூடி விளையாடுவதில் கிடைக்கும் குதூகலமும், கீழே விழுந்து வாரிய கீறல்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களும், கூட்டாஞ்சோறு கற்றுக் கொடுத்த உணவுப்பழக்கத்துடன் கூடிய பகிர்ந்துண்ணுதலும், விளையாடிய களைப்பு தந்த ஆழ்ந்த உறக்கமும், இணையத்தாலும், மின்னணு சாதனங்களாலும் எக்காலத்திலும் வழங்க முடியாது! இக்கருவிகளைப் பயன் படுத்துவதால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, நரம்பு தளர்ச்சி முதல் மூளைக்  காய்ச்சல் வரை, வித விதமான உடல் உபாதைகள் வருவதற்கான சாத்தியக்  கூறுகள் மிக அதிகமென்று ஆய்வுகள் கூறுகின்றன. கைபேசியில் நன்றாக புகைப்படம் எடுத்தாலும், க்ரேயான்களையும், பென்சிலையும் கொண்டு, நம்மை வரைந்து, குழந்தைகள் தரும் ஆனந்தம் அளவில்லாதது. இணைய விளையாட்டுகளில் அவர்கள் எடுக்கும் புள்ளிகளை விட மணல் விளையாட்டுகளில் கட்டப்படும் வீடுகள் தான் மிகவும் அழகானவை. க்ரேயான்களையும், மணலையும் பிடுங்கிக் கொள்ளும்போது குழந்தைகளின் கற்பனைத் திறனையும் வளர்ச்சியையும் சேர்த்தே பிடுங்குகிறோம். நினைத்த மாத்திரத்தில் நிறுத்திவைக்க அனுமதிக்கப்படும் கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாட அவர்களை பழக்கப் படுத்தி விட்டு, நிஜ வாழ்க்கையில் சிறிய தோல்வியினைக் கூட ஏற்க இயலாத அளவிற்கு அவர்களை வளர்த்து வருகிறோம். இதெல்லாம் சரி தான், குழந்தைகள் விளையாட இடமும், பாதுகாப்பான சூழலும் எங்கு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஊர் பேர் தெரியாத நபர்களுடன், அனைத்து விதமான ஆபத்துகளும் ஆபாசங்களும் நிறைந்த இணையத்தை விட உங்களைச் சுற்றியுள்ள சமூகம் ஒன்றும் கொடூரமானதல்ல! குழந்தைகள், பெரியவர்கள் போல் நடித்தால் மட்டும் தான் அழகு! பெரியவர்களைப் போலவே இருப்பதென்பது குழந்தைத்தனத்திற்கே இழைக்கப் படும் பெரும் பாவம்! கலாக்சி டாபையும், ஐ பாடையும் விட எழுத்துப் பலகையும் பல்பமும் தான் குழந்தைகளின் கையில் அழகாக இருக்கிறது! கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அவர்களுடன் விளையாடுங்கள், கதை கூறுங்கள், அவர்களின் கதையைக் கேளுங்கள், அவர்களுக்கு சுவாரசியத்தை வழங்கி, உங்கள் வாழ்வினையும் சுவாரசியம் நிறைந்தாக மாற்றிக் கொள்ளுங்கள்.      தேடு இயந்திரங்களில் உலகைத் தேட விடாமல் அவர்களை கை பிடித்துக் கூட்டி வந்து நிஜமான, அழகான உலகினை காண வையுங்கள்! தன்னலமற்ற, தன்னிகரற்ற, ஆரோக்யமான போட்டி உள்ள, போலியில்லா ஒரு சமுதாயம் அமைய வேண்டுமெனில் குழந்தைத்தனத்தை பாதுகாப்பது அவசியம்...  குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்!  
                                         -    குழந்தைகளுக்காக,
                   வசுப்ரதா ரெங்கராஜன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

Thursday, 24 July 2014

ஆஹா என்ன ருசி!

இனிப்புடன் இனிய ஆரம்பம்!
பசியைத் தூண்டவோ அல்ல
ருசியைக் கூட்டவோ என்றெல்லாம்
எனக்கில்லை வேகாதக் கவலை.
பச்சை இலையின் பச்சையம்
இச்சிடும்போது மிச்சமாவது என்
எச்சம் மட்டும் தான்!
காய்ந்து கிடந்த எனக்கு
காய் எல்லாம் கனிகள்!
பதம் பார்த்து உண்கையில்
இதமாக வருகிறது சாதம்!
ஆஹா என்ன வெளுப்பு
என்று எண்ணி முடிப்பதற்குள்
நெய்யும் பருப்பும் கலந்துவிட்டது!
என்ன உண்பதென்று குழம்புகையில்
திண்ணமாய் திரளுகிறது குழம்பு!
பல ‘ரசம்’ அறிந்தாலும்
பரவசமளிப்பது பழரசம் தான்!
அமுதமோ இது என்று
எண்ணி அங்கலாய்த்து அடங்குவதற்குள்
வண்ணமாய் வழிகிறது திருக்கண்ணமுது!
இனித்த ‘நா’க்கு புளிக்க
வரும் தயிர், புளிக்க
வேண்டாமெனில் ஊறுங்கள் ஊறுகாயில்!
சுவைப்பதற்கு மட்டுமின்றி கையில்
வழிவதை துடைப்பதற்கும் உமிழ்கிறது
வெள்ளம் போல் உமிழ்நீர்!
பச்சிலையை எச்சமிட்ட இதழ்கள்,
வெள்ளையடித்து அச்சிடுகிறது வெற்றிலையை!
வெளியில் சிவந்தது கன்னம், 
உள்ளே தெரிந்தது வண்ணம்,
வான்வெளியில் பறந்தது எண்ணம்,
ஆஹா என்ன ருசி!
இப்படி வகையான வாழ்வையும்
சுவைக்கத் தெரிந்தால், வாழ்வும்
ஆஹா என்ன ருசி!
                   - பசியுடன்,
                    வசுப்ரதா ரெங்கராஜன்.

Wednesday, 23 July 2014

'பதிய' வேண்டியவற்றை மட்டும் பதியுங்கள்!

கர்நாடக முதலமைச்சர் அரசவையில் தூங்கினார் என்று படம் போட்டும், அதனை விவாதித்தும் பல பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. முதலில், அந்தப் படம் அவர் தூங்கியதைத் தான் படம் பிடித்திருக்கிறதா அல்லது கண் சிமிட்டுகையில் படம் பிடிக்கப் பட்டதா என்பதே தெரியவில்லை. அப்படியே அவர் தூங்கித் தான் கொண்டிருந்தார் என்றாலும் ஒரு மனிதரை, இந்த அளவுக்கு சாடுவது சரி எனப்படவில்லை. இரவெல்லாம் விழித்திருந்து மிகவும் ‘அவசியமான’ வேலைகளை செய்யும் நாம், அடுத்த நாள் காலையில் பள்ளியிலோ கல்லூரியிலோ அலுவகத்திலோ கண் அசராமலே இருந்து விடுகிறோம் பாருங்கள்! அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் முதலைமைச்சர், கோரமான சம்பவம் நிகழ்ந்திருக்கும் இத்தருவாயில் தூக்கமே இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருப்பார் என்பது தான் உண்மை! அதற்காக நான் அரசாங்கத்திற்க்கோ அமைச்சர்களுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. ஒன்றுமே அறியாத ஒரு இளம் மொட்டு கசக்கிப் பிழியப்பட்ட செய்தி அனைவரையுமே கொதித்தெழத் தான் செய்துள்ளது. உங்கள் கோபங்களை இம்மாதிரியான தேவையில்லாத பதிவுகள் மூலம் தவறாக பதிவு செய்கிறீர்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கோபம், வீரம் எல்லாம் நீங்கள் வாக்களிக்கும்போதும், உங்கள் அண்ணனோ தம்பியோ தோழனோ பெண்களைப் பற்றி தவறான ஒரு கருத்து கொண்ட போதும், கேளிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் குழந்தைகளை ஆபாசப்படுத்தும்போதும், பள்ளிகள் சந்தைகளாக்கப்பட்ட போதும் இருந்திருந்தால் இன்று இந்த கொடுமையே நிகழ்ந்திருக்காது. இது போன்று சம்பவங்கள் சமீப காலங்களில் ஹோசுரிலும் திருச்சியிலும் மேலும் பல இடங்களில் நடந்த கதைகளையும் நாம் அறிவோம். தெரிந்தது சில வென்றால் தெரியாதவை பல! எவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் கோஷங்கள் எழுப்பியும் இம்மாதிரியான பாலியல் கொடுமைகளின் விகிதம் அதிகரித்துக் கொண்டிருப்பதின் காரணத்தை உணராமல், அவர் தூங்கினார், இவர் கொட்டாவி விட்டார், நாடு எங்கே போகிறது என்பது போன்ற வாதங்கள் எந்த விதத்தில் இந்தக் குற்றங்களை குறைக்கப்போகிறது. பேசுவதற்கு ஒன்று கிடைத்து விட்டது என்பதற்காக முக்கியமாக எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதை மறந்து விடாதீர்கள். குழந்தைகளைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால் மற்றவர்கள் அவர்களுடன் பழகும் விதம் முன்பே தெரிந்திருக்கும், கேளிக்கை என்ற பெயரில் ஆபாசத்தைத் தவிர்த்திருந்தால் ஆண்களின் பார்வையும் சீராய் இருந்திருக்கும், பெண்களைப் பற்றியும் பெண்ணியம் பற்றியும் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளருங்கள். ஆண்களைப் பற்றியும் அவர்களின் ஹார்மோன்கள் பற்றியும் பெண் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். காமமும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான், அதனை ஆளும் விதத்தில் தான் நாம் தீர்மானிக்கப் படுகிறோம் என்பதனை நீங்களும் முதலில் உணருங்கள். இம்மாதிரியான கொடுமைகள் நடக்கும் மாநிலத்தின் அமைச்சருக்கு மட்டுமா தூங்காமலிருக்க வேண்டிய பொறுப்பு? நமக்கில்லையா? அவ்விளம்பிஞ்சு நமக்கும் உறவில்லையா? ஒரு வகையில் சமுதாயமாகிய நாம் தான் இது போன்ற அவல நிகழ்வுகளுக்குக் காரணம் என்று உறுத்தவில்லையா? இதையெல்லாம் சிந்திக்காமல், எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசாமல், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடித்துப் போட்டுக் கொண்டிருந்தால், உருண்டு கொண்டே இருக்க வேண்டியதான்! இது மாதிரியான பாலியல் கொடுமைகள் இத்தோடு முடிவுப் பெறட்டும். அதற்கான பொறுப்பு நம் கையில் தான் இருக்கிறது என்பதனை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். நாளைய சமுதாயம் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதனையும் மறந்து விடாதீர்கள்!
- வசுப்ரதா ரெங்கராஜன்

குழந்தையென மீண்டும் மாறும் ஆசை!

குழந்தைப் பருவம் தான் எவ்வளவு இனிமையானது! சிரிப்பும் அழுகையும் மட்டுமே சிறந்த மொழிகளாகத் திகழ்ந்த நாட்கள். புதிய பொம்மைகளும் புளிப்பான மிட்டாய்களுமே அந்நாட்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு. தேவைகள் தெளிவாகவும், எளியதாகவும் இருந்தன. தவறுகள் திருத்தப் பட்டதே தவிர, தவறானவனெனத் தீர்மானிக்கப் பட்டதில்லை. ஒன்றிற்கு நூறு முறை யோசித்து செயல் பட வேண்டிய அவசியம் இருந்ததில்லை. பிறரைப் பற்றி ஆராய வேண்டிய பொறுப்பும் இருந்ததில்லை. தனக்கென ஒரு உலகம், மிகவும் அழகான உலகம். அதில், தானே ராஜா, தானே மந்திரி, தானே திருடனும் கூட! பெரும்பாலும் திருடப்பட்டது என்னவோ, இதயங்கள் மட்டும் தான். உண்ணாமல், உறங்காமல், ஓயாமல் ஓடியதற்காக அன்று கண்டிக்கப்பட்டோம். சொல்லப்போனால் அவை மட்டுமே அப்பருவத்தின் அதிகபட்ச குற்றம். இழுத்த இழுவைகள் எல்லாம் இசையெனப்பட்டன. ராஜாவும் ரஹ்மானும் கூட குறைவா(க்)கப்பட்டனர். என்ன பேசினாலும் கவனிக்கப்பட்டதே தவிர, கணிக்கப் பட்டதே இல்லை. நமக்கு நாமே பேசிக்கொண்டாலும் கூட, ரசிக்கப்பட்டது. வார்தைகளுக்கெல்லாம் ‘ஒரு’ அர்த்தம் மட்டுமே இருந்த தெளிவான தினங்கள். தூங்கினால் கூட பாராட்டப்பட்டது. நண்பனாக வேண்டுமெனில் புன்னகை ஒன்றே குறைந்தபட்ச தகுதி. பெரும்பாலான சண்டைகளுக்கு மிட்டாய்களும், புதிய அழிப்பான்களும் மட்டுமே காரணமாகத் திகழ்ந்தன. தான் மட்டுமல்லாமல் அனைவருமே அழகாகத் தெரிந்தனர். பயமுறுத்தியது என்னவோ பூச்சாண்டி மட்டும் தான். பேசிய வார்த்தைகள் பெரிதும் நம்பப்பட்டது. அப்பாவிற்கு அலங்காரம் செய்தும், அம்மா அதட்டுகையில் அழுவது போல் நடித்து, தப்பித்துக்கொள்வதும், அண்ணனிடம் அடி வாங்குவதும், அக்காவின் பங்கிலும் பங்கு கிடைக்கும் தருணங்களும், தன்னை விடவும் இளைய குழந்தைகளிடம் காட்டும் குழந்தைத்தனமான பொறுப்பும், பாட்டியின் நிஜமான கதைகளும், தாத்தாவின் மூக்குக் கண்ணாடியை ஒளித்து வைத்து விளையாடிய பொழுதுகளும், அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பாவின் முத்தங்களும், அண்டை வீட்டாரின் தின்பண்டங்களும், ஆசிரியரின் அதட்டல்களும், அவர் போல் நாம் நடித்து விளையாடிய ஆட்டங்களும், தோழனின் அடிகளும், தோழியின் கடிகளும், தெரிந்தோரின் ஆலிங்கனமும், தெரியாதவரின் புன்னகையும், டாமும் ஜெர்ரியும் அறிமுகமான அழகான நாட்களும் அள்ளி வழங்கிய மகிழ்ச்சியினை, ஓயாமல் பேசியபோதும் நிலவிய அமைதியினை, நினைத்தாலே இனிக்கும் இப்பருவத்தினை மீட்டெடுக்க, செத்து தான் பிழைக்க வேண்டும். உருண்டு, விழுந்து, தவழ்ந்து, எழுந்த குழந்தைப் பருவம், வாழ்க்கையின் ஒரே வரம்! 
                                                  
                                                     - குழந்தையென மீண்டும் மாறும் ஆசை,
                                                        வசுப்ரதா ரெங்கராஜன்.