Sunday, 18 January 2015

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு என்று பரவலாக அழைக்கப்படும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” (ஏறு என்பது காளையைக் குறிக்கும்), இன்று பல சர்ச்சைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பாரம்பரிய விளையாட்டின் தடங்களை அறிந்து கொண்டால் மட்டுமே, தடைகளையும் அதன் காரணிகளான தளைகளையும் களைய முடியும் .

‘சல்லி’ என்றால் காசு. மாடுகளை அடக்குபவருக்கு பரிசாக, மாடுகளின் கொம்புகளில் காசைக் கட்டி விளையாடப்படுவதால் இதனை சல்லிக்கட்டு என்றழைக்கப்பட்டு அதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டு என்றாகிப்போனது.

காளையை அடக்குபவரின் மீது பெண்கள் காதல் கொள்வதும், அவரையே மணமுடிக்கும் வழக்கம் இருந்ததையும், கலித்தொகை முதலான சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டினை, வாடி மஞ்சுவிரட்டு, வேலி விரட்டு மற்றும் வடம் மஞ்சுவிரட்டு என மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். வாடி மஞ்சுவிரட்டினில், ஓடி வரும் காளையின் திமிலை தொற்றிக்கொண்டு அதிக தூரம் செல்பவரே வென்றவராவர். வேலி விரட்டைப் பொறுத்த வரையில், ஒரு விளையாட்டு மைதானத்தில் காளைகள் ஓட விடப்படும். இந்த காளைகளை அடக்க இளைஞர்கள் பலர் களத்தில் இறங்கி, தத்தம் வீரத்தைக் காட்டுவர். ஒரு நீளமான வடத்தில் கட்டப்பட்ட காளையை  பல இளைஞர்கள் சேர்ந்து அடக்குவது, வடம் மஞ்சுவிரட்டு. இந்த மூன்று வகைகளிலுமே கடைபிடிக்கப்படும் முக்கியமான விதி, காளைகளை காயப்படுத்தாமல் அடக்க வேண்டும்.

காளைகளைக் கொண்டு உழவு நடந்த நாட்களில், அவற்றை அடக்கி அதனோடு இயைந்து வாழ்வது அவசியமானதாக இருந்தது. தற்போது இயந்திரம் கொண்டு உழவு செய்தாலும், இயந்திரமயமான நம் வாழ்வை வளம் பெறச் செய்ய ஏறு தழுவுதல் அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல், சீறி வரும் காளைகளை அடக்கும் ஆண்மகனின் வீரமும் தீரமும் திறமுடன் பறைசாற்றப்பட்டது. எதனையும் எதிர் கொள்ளும் துணிச்சலும், வறண்டு போகாத வீரமும் தமிழனின் பண்பெனப் பறைசாற்றிக் கர்வம் கொள்ளும் நாம், இவ்விளையாட்டினை அதற்கான உறை கல்லென உணர்தல் வேண்டும்.

மேற்கத்திய மாட்டுச்சண்டைக்கும் நமது ஜல்லிக்கட்டுக்கும் கொம்பளவும் தொடர்பில்லை. கொலைவெறியூட்டப்பட்ட எருதினைக் கொல்லும் கொடூரத்திற்கும், வீரம் செறிந்த திமில்களையுடையக் காளைகளை அடக்கும் தீரத்திற்குமான வெற்றிக்களிப்பு சமமாகுமா?

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு சத்து மிகுந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. இயற்கையோடு இயைந்து வாழ, கால் நடைகளுடனும் நட்பு பாராட்டும் விதமாக அமைந்துள்ள இப்பெருமைமிகு பாரம்பரியம், மிருக வதை என வகைப்படுத்தப்படுவது நியாயம்தானா?

கோத்தகிரி மலையில் அமைந்துள்ள 3500 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்றில் ஆண்கள் ஏறு தழுவுவது போலான படங்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். மேட்டுபட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்றிலும் மாட்டினை அடக்குவது போன்ற காட்சிகள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்து சமவெளி நாகரீகத்திலும் காளைகளை அடக்கும் முறைகள் இருந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பழம்பெரும் வரலாறு கொண்ட ஏறு தழுவுதலுக்கு, 1113-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய மாட்டுச்சண்டையே காரணமாக விளங்குகிறது எனும் வாதம், நகைப்புக்குரியது.

ஏறு தழுவுவதினால் மாடுகள் வதைக்கப்படுகின்றன, பத்து முதல் பன்னிரண்டு மனிதர்கள் வருடத்திற்கு பலி ஆகிறார்கள் என்று கவலையுறும் மனிதர்களெல்லாம், ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தனக்கும் உணவில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? ஜல்லிக்கட்டு மனித உயிரை பறிப்பதால் தடை செய்யப்படுகிறது என்று செய்தி வந்த வேளையில், நண்பன் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘’மதுபானக் கடைகளில் மட்டும் சத்து டானிக்கா கொடுக்கப்படுகிறது?” என்று நகைச்சுவை கலந்து பதிவு செய்திருந்தார். தெருக்கள் தோரும் மதுபானக் கடைகளைத் திறந்து வைத்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் செயலை விடவா கொடியது ஜல்லிக்கட்டில் உயிரிழப்பது?

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பதை நியாயப்படுத்தவில்லை. இதை விடக் கொடியவை பல இருந்தும், ஏன் பாரம்பரிய விளையாட்டு ஒன்று பலரின் கண்களை உறுத்துகிறது என்ற ஆதங்கம் தான் தாளவில்லை. எந்த விளையாட்டில் தான் ஆபத்தில்லை? வாகன விபத்தில் பலர் உயிரிழக்கின்ற காரணத்திற்காக வாகனங்களையே தடை செய்ய முடியுமா? எம்மண்ணின் வீர விளையாட்டினை தடை செய்வதற்கு பதிலாக, பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி சில கட்டுபாட்டுக்களை விதித்து, விளையாட்டினை நடத்த அனுமதி அளித்திருந்தால் காளைகள் சீற, இளைஞர்கள் பாய,  தைப் பொங்கல் திருநாளே களை கட்டி இருந்திருக்கும்.

மேற்கத்திய கலாச்சாரங்களை நமது கலாச்சாரமாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஒன்றாவது எம் மண்ணினுடயதாக இருந்து விட்டுப் போகட்டுமே. கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் என அனைத்திலுமே ஜல்லிக்கட்டினைக் கண்டு, கேட்டு, மகிழ்ந்து, மார்தட்டி கொண்ட எமது வீரமகன்களை காளைகளை அடக்க விடாமல் அடக்குவது எவ்விதத்தில் நியாயம்? 

ஏறு தழுவுதல் ஒரு விளையாட்டு என்பதனைத் தாண்டி, எம்மண்ணிலும், மனத்திலும் தலைமுறை தலைமுறையாக கடந்து வந்த பாரம்பரியம் என்பதனை எஞ்சியோர்க்கு எப்படி உணர்த்துவது? 

மல்லுகட்டுவதைத் தவிர இந்த ஜல்லிக்கட்டுக்கு வேறு வழி இல்லை!
                                                           - வசு


Thursday, 8 January 2015

அழகு மகளும் அற்புத அப்பாவும்.

அரவணைப்பை உருவகப்படுத்த வேண்டுமெனில், பெரும்பாலும் நாம் அனைவருமே நம் அப்பாவைத் தான் கூறுவோம். அதுவும் பெண் குழந்தைகள் என்றால், அப்பாவே அவர்களுக்கு உலகில் சிறந்த மனிதன். எவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியாக இருப்பினும், ஒரு தகப்பனுக்கு தன் மகள் என்றுமே தன்னை ஆளும் ராணியாக இருத்தலில் தான் மகிழ்ச்சி. பெண்ணும், தான் மணக்கவிருக்கும் ஆண்மகன் தன் தந்தையை போலானவனாக இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்த்திருப்பாள். சொல்லப்போனால் ஒரு பெண்ணினுடைய முதல் காதலும் அவளது தந்தை தான். ஒரு பெண் தைரியசாலியாக இருக்க வேண்டுமெனில், அவளின் தந்தைக்கு அதில் பெரும் பங்கிருக்கிறது.
பொட்டு வைத்து வளையல் மணி போட்டு அலங்கரித்து, கழுத்தைக் கட்டிக்கொண்டு உறங்கி, அம்மாவின் அதட்டல்களை மேல்முறையிட்டு, யானை சவாரி செய்து, கைப்பிடித்துப் பள்ளிக்குச் சென்று, மோட்டார்சைக்கிளில் முன் அமர்ந்து, மதிப்பெண் அட்டை காண்பிக்க பயந்து, புதுப் பொருள் கேட்டு அடம்பிடித்து, எதிர்த்துப் பேசி இப்படி எத்தனை தான் செய்தாலும் அத்தனையும் பொறுமையாய் ஏற்றுக்கொள்வதில் ஒரு தந்தைக்கு நிகர் தந்தையே.
தந்தையின் அதட்டல்களை எழுத்தாளர் பாலகுமாரன் அழகாகக் குறிப்பிடுவார். விக்கலை நிறுத்த பயமுறுத்தப் படுவது, விக்கலை நிறுத்தத் தானே தவிர உங்களை பயம் கொள்ள வைக்க வேண்டியில்லை. அப்படிப் பட்டது தான் அப்பாவின் அதட்டல்களும். மகளை அதட்டிவிட்டு மகளை விட அதிகமாக வருத்தப்படும் அப்பாக்கள் தான் இங்கு அதிகம். அம்மா எவ்வளவு திட்டினாலும் கண்டுக்கொள்ளதவர்கள், அப்பாவின் முறைப்பிற்கே கண்ணீர் தளும்பும் மகள்களும் இங்கு அதிகம்.
வயதுக்கு வந்த பின் மகளிடமிருந்து சிறிது விலகும் அப்பாக்கள், பொறுப்பு எனும் போர்வையைப் போத்திக் கொண்டு பிரிவு தரும் கவலைக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அந்நேரங்களில், அப்பாவினை தன் பிள்ளையாய் தத்தெடுக்கிறாள் ஒவ்வொரு பெண் மகளும்.
அப்பாவின் அலுவலுக்கு உதவி செய்ய மகள்களுக்கு என்றுமே பேரானந்தம். தான் அறியாதவைகளை தன் மகள் தனக்கு சொல்லிக்கொடுக்கும்போது, தன்னையே மறந்து பெருமையடைகிறார் ஒவ்வொரு தந்தையும். அதற்காகவே தெரிந்ததைக் கூடத் தெரியாதது போல் சில நேரங்களில் நன்றாக நடிக்கிறார்கள் இந்த தந்தைமார்கள். மகளின் பெருமையை பீத்திக் கொள்வதில் அனைவரையும் தோற்கடித்து விடுவார்கள் இந்த அப்பாக்கள்.
மகளுக்கு, பிற ஆணால் தொல்லை எனில் தீயில் காய்ந்த கரண்டி போல் கொதித்து விடுகின்றனர் அப்பாக்கள். தன் பாதுகாப்பிற்காகப் பாடுபடும் அப்பாக்களைப் பெற்ற பெண்களும், படரத் தூண் கிடைத்த கொடி போல் வாழ்வில் பற்றுடயவர்களாகவே படருகிறார்கள். ஆண் பிள்ளை இல்லையோ அய்யோ பாவம் என பிறர் கூறும்போது ‘மகனுக்கு மகனா மகளுக்கு மகளா என் அப்பன் ஆத்தாவா எம்மக இருக்கா, அது போதும்’ என்று சொல்லும் அப்பாக்களுக்கு எல்லாம் மகள் என்பவள் மகத்துவமானவள்.
ஆண் வர்கத்தின் மீதே கோபம் கொண்டவளாயினும் அவளுக்கு நம்பிக்கை அளிப்பது தந்தை தான். ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆசானாக, அன்பானவனாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக, முதல் மனிதனாக, எதிர்பார்ப்பில்லாத அன்பினையும் ஆபாசமில்லாத காதலையும் ஒரு ஆணினால் கொடுக்க முடியும் எனில் அது அப்பாவாக மட்டுமே இருக்க முடியும்.
அப்பாவினையுடைய அத்துணை மகள்களுமே இளவரசிகள்தான், மகள்களைப் பெற்றெடுத்த அத்துணை அப்பாக்களும் அரசர்கள் தான். மகளை மணமுடித்து கொடுத்த பின்னும் அவளை ஒரு குழந்தையாகவே பாவிப்பதில் தந்தைக்கு நிகர் அவரே! பல நேரங்களில் அவளைத் தாயாக நினைப்பதும் இந்த அப்பாக்கள் தான். சிறந்த கணவனாக இருக்கத் தவறினாலும், சிறந்த தந்தையாக இருக்க மறப்பதில்லை, அழகான அப்பாக்கள்.
மிகக் கொடிய விஷயம் என்று ஒன்று ஒரு மகளுக்கு இருக்க முடியுமெனில், அது அவளது தந்தையின் கண்ணீராகத்தான் இருக்க முடியும். விஷத்தை விடக் கொடியது ஒரு தந்தையின் கண்ணீர். பொம்மையாய், உறுதுணையாய், தூணாய், துயர் நீக்கியாய், காதலாய், பிள்ளாய், ஆசானாய், ஆத்மார்த்தமாய், அவதாரங்கள் பல எடுத்த இந்த மனிதன் என்றுமே சிரித்துக்கொண்டே இருப்பது தான் ஒவ்வொரு மகளுக்கும் ஆனந்தம்.
என்னைப் பொறுத்த வரையில் அப்பா என்பவர் அலாவுதீன் பூதம் போலானவர். சிறிது பயமளித்தாலும் கேட்ட அனைத்தும் நிறைவேற்றும் அற்புத பூதம்! அன்பு கொண்டு அடிமைப் படுத்தப் பட்ட இந்த பூதம், தன் மகாராணி மகள் கட்டளையிடும் முன்னே நினைத்ததை நிறைவேற்றுவதையே மூச்சாகக் கொண்டுள்ளது. மகளாய் இருப்பதை விட வேறு பேறு இருப்பின், தன் தந்தையைப் பற்றி தன் மகளுக்கும் மகனுக்கும் கூறும் பொழுதுகளாகத் தான் இருக்கக் கூடும்!
                                                 அப்பாவின் மகள்,

                                                  வசு.