சில்லிட்டுப் போவாய் என்று முன்பேயறிந்திருந்தால் உன்னை
ஷில்லாங்கிற்கே அனுப்பியிருக்க மாட்டோம்.
வாழத் தகுதியானது இப்பூமி என்றுரைத்து, நீயே
விலகியதில் என்ன நியாயம்?
முட்டாள்களும் மூர்க்கர்களும் முடிவில்லாமல் நிறைகையில்
முதல் குடிமகனாய், கனவின் முகமாய் இருந்த நீ
முந்திக்கொண்டு ஏன் போனாய்?
கோள் பிடித்தாய் கோலும் பிடித்தாய், இன்று
உனக்கென கோவிலையும் பிடித்துவிட்டாய்!
உன் கனவு ஆண்டு வருமுன்னே நீ
கனத்துப் போவதுதான் முறையா?
நீ அனுப்பிய ஏவுகணைகளுக்கும் துணையிருக்க
நீயே ஏவுகணையாய்ப் போனாயோ?
நீ மீட்டிய வீணை இன்று வீணாய்ப் போவதென்ன?
இளவட்டப் பார்வையினில் இன்று இருள் சூழ்ந்ததென்ன?
புவி வட்டப் பாதையிலே புகை மூண்டதென்ன?
இன்று புவி விட்டுப் பாதியிலே நீ போவதென்ன!
நீ நேசித்த குழந்தைகள் யாவும் இன்று
உம்மையே யாசித்துக் கொண்டிருக்கின்றன!
அகவை எண்பதைத் தாண்டினும் உனது அகவல்கள்
எல்லைகளைத் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
.
புண்ணிய பூமியில் பிறந்த நீ, இறந்து,
புவியினில் சூனியம் சூழவிட்டாய்!
அழக்கூட அருகதையற்ற அரசியல்வாதிகளெல்லாம் உனக்கு
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
என்ன பாவம் செய்தேனோ, உம்மைக் காணும்
முன்பே காட்சிப் பொருளாகிவிட்டாய்!
மறு ஜென்மம் ஒன்றிருப்பின் மறக்காமல் நீ பிறந்து
முறையாக நான் வந்து முறையிடவே மறையோது!
- வசு
No comments:
Post a Comment